அறிவிப்பின்றி தடைபடும் மின்சாரம்....அவதியில் தமிழக மக்கள் - புதுகையில் விஜயகாந்த் பேச்சு
புதுகை: தமிழகத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைசெய்யப்படுவதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புகார் தெரிவித்துள்ளார். மேலும், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜெயலலிதா மேஜையைப் பார்த்து பேசுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தே.மு.தி.க சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லையென்றும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்கலாம் எனவும் மின்துறை அமைச்சர் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 10 மணி நேரம் வரை தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக விஜயகாந்த் குறிப்பிட்டார்.

மேலும் அவர், "தே.மு.தி.கவை பார்த்து அ.தி.மு.க, தி.மு.க., பயப்படுகிறது. டி.எஸ்.பி விஷ்ணு பிரியா கொலையை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கிறது. ஏன் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை அவர்கள் கைது செய்யவில்லை.
அது ஜெயலலிதா போலீஸ். கூட்டணி குறித்து பேச அவசியமில்லை. அரசியலில் ஒருவாரம் அதிகம். டி.எஸ்.பிக்கு மன அழுத்தமா? மணி அழுத்தமா? டெபுடி சூப்பிரெண்டு போலீஸ் இன்று டம்மி சூப்பிரெண்டு போலீசாகிவிட்டது.
"சட்டசபைக்கு வாங்க" என்று கூப்பிடுகிறார்கள். தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்கின்றன. எதிர்கட்சிகளே இல்லாமல் ஜெயலலிதா மேஜையை பார்த்து பேசுகிறார். முதுகை திருப்பி பேசினால், கைதட்டும் எம்.எல்.ஏ க்கள் தெரிவார்கள்" என்று பேசினார். விழாவில் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அரசால் இலவசமாக வழங்கப்படும் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் தரமாக இல்லை எனக் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications