வேஷ்டி கட்டிய ஜெ., சேலை கட்டிய கருணாநிதி... திருச்சி மாநாட்டில் விஜயகாந்த் த்ரில் பேச்சு
திருச்சி: திமுக, அதிமுக ஊழல் கூட்டணி நாங்கள் தான் மக்கள் நலக் கூட்டணி. வேஷ்டி கட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா. சேலை கட்டிய திமுக தலைவர் கருணாநிதி என்று விமர்சனம் செய்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருவோர் வயிறு குலுங்கச் சிரித்துச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு கலகலவென பேசி அசத்தி வருகிறார் விஜயகாந்த்.

இந்நிலையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா சார்பில் மாற்று அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். கடைசியில் தான் விஜயகாந்த் மைக் பிடித்தார்.
அங்கும் வழக்கம் போல காமெடி கலந்து அவர் பேசியதைக் கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்து ரசித்தது. மேடையில் இருந்த தலைவர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரது பேச்சிலிருந்து: இப்பொழுது நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்பேன்..பல்பை கண்டுபிடித்தது யார்? எடிசன். ஊழலை கண்டுபிடித்தது யார் என்று கேட்டு பின்னர் கருணாநிதி என்று விஜயகாந்த் கூறினார்.
சட்டசபையை புகழ் கூடாரமாக ஜெயலலிதா மாற்றி வருகிறார். மக்களுக்காக நான் மக்களால் நான் எனக் கூறுகிறார் ஜெயலலிதா. குடும்பம் இல்லை எனக் கூறுகிறார். குடும்பம் இல்லை எனக் கூறும் ஜெயலிலதா தனது சொத்துக்களை மக்களுக்காக எழுதி வைக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார்.
மேலும், சேலை கட்டிய கருணாநிதி, வேஷ்டி கட்டிய ஜெயலலிதா என விமர்சனம் செய்தார். திமுகவில் குறுநில மன்னர்களாக பொன்முடி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன் இவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அதேபோல் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் இருக்கின்றனர்.
திமுக, அதிமுக ஊழல் கூட்டணி நாங்கள் தான் மக்கள் நலக் கூட்டணி. சிந்தித்து பாருங்கள் மக்களே இவர்களுக்கா உங்கள் ஓட்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை வழங்குவோம், மூடப்பட்டுள்ள அரசு பள்ளிகளை திறப்போம், வீட்டு மனை பட்டா வழங்குவோம்.
மதுவிலக்கை கொண்டு வருவோம். குடிசை வீடுகள் கட்டி, கட்டிடிடி தரப்படும் என எழுத்து கூட்டி படிக்க முடியாமல் சற்று திணறினார். ஒரு வழியாக அறிக்கையில் உள்ள சில அம்சங்களை மட்டும் வாசித்துவிட்டு, வழக்கம் போல் தனக்கே உரிய பாணியில்..மக்களே வாகனத்தில் செல்லும் போது பத்திரமாக செல்லுங்கள் என்றார் விஜயகாந்த்.
முன்னதாக நாங்கள் ஓட்டுக்கு யாரிடமும் பணம் தரமாட்டோம், பணம் வாங்கவும் மாட்டோம் இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று விஜயகாந்த் உள்பட பலர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications