த்தூ...ன்னு பத்திரிகையாளர்களை காறி துப்பவே இல்லை... பிரஸ் கவுன்சிலில் விஜயகாந்த் பச்சை பொய்
டெல்லி: பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது நிதானமே இல்லாமல் த்தூ...என்று தாம் காறி துப்பியதை பிரஸ் கவுன்சிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அப்பட்டமாக மறுத்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த ரத்த தான முகாம் ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தன்னை கேள்வி கேட்ட செய்தியாளர்களை நோக்கி காறி உமிழ்ந்து கடும் வார்த்தைகளில் பேசினார். அதேபோல சேலத்தில் தனக்கு எதிரில் நின்று கேள்வி கேட்ட நிருபர் ஒருவரை தாக்க முயற்சித்தார்.
இது தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சில் தானாகவே முன்வந்து விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், இந்திய பிரஸ் கவுன்சில் முன்பு விஜயகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இது குறித்து அமர்நாத் கசூரி என்ற செய்தியாளர் இந்திய பிரஸ் கவுன்சிலிடம் தாக்கல் செய்த புகார் மனுவும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் சார்பில் தே.மு.தி.க. டெல்லி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சி.கே.பிரசாத் முன்னிலையில் விஜயகாந்த் சார்பில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

என்ன அதிகாரம் இருக்கிறது?
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:
ஊடகங்கள் மற்றும் அவை சார்ந்த நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாக்கும் நிறுவனமாக இந்திய பிரஸ் கவுன்சில் அமைப்பு இருந்தாலும் செய்தியாளர்கள் தவறு செய்யும்போது சரி செய்வதும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும் அதன் முக்கிய நோக்கமாகும். அதேநேரத்தில் தானாக முன்வந்து தனி நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பிரஸ் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை.

அடிக்க முயற்சிக்கவில்லை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செய்தியாளர் யாரையும் அடிக்க முயற்சிக்கவில்லை. தீயநோக்கத்துடன் யாரையும் அவமானப்படுத்தவும் முற்படவில்லை.
காறி துப்பவே இல்லை...
குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் நாளன்று ஒரு கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டு அதற்கு பதிலளிக்க வற்புறுத்தினார். இதே கேள்வியை தமிழக முதல்வரிடம் கேட்க முடியுமா? என்று விஜயகாந்த் கேட்டபோது நிகழ்ந்த உடல் அசைவு காறி உமிழ்ந்தது போல காட்சியளித்தது.

ஜஸ்ட் உடல் அசைவுதான்..
எந்த செய்தியாளர் அல்லது செய்தி நிறுவனத்துக்கு எதிராகவும் அவர் காறி உமிழவில்லை. அது எந்த உள்நோக்கமும் இன்றி செய்யப்பட்ட உடல் அசைவு மற்றும் உடல்மொழி ஆகும். இதில் எந்த தீய நோக்கமும் கிடையாது. செய்தியாளரை விஜயகாந்த் அவமானப்படுத்தவோ வேறு எங்கும் செய்தியாளரை அடிக்கவோ முற்படவில்லை.
இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

கூடுதல் அவகாசம்
இந்த விளக்கங்களை கேட்ட இந்திய பிரஸ் கவுன்சில் இது குறித்து கூடுதல் விளக்கங்களை விஜயகாந்த் எழுத்து வடிவில் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications