திமுக-தேமுதிக கூட்டணி அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன்?
சென்னை: திமுக-தேமுதிக கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரு கட்சிகளும் அறிவிப்பு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.
திமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இதில் கலாநிதி மாறன் முக்கிய பங்காற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக தேமுதிக கட்சி வட்டாரங்களில் கேட்டபோது, இரு கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது.

தேதி அறிவிக்கட்டும்
தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே விஜயகாந்த் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்றனர். தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

திமுகவுக்காக காத்திருப்பு
இதற்கு காரணம், இம்மாதம் 7 வரை நடக்க உள்ள திமுக நேர்காணலாகும். நேர்காணல் முடிந்தால்தான், திமுக மேலிடம் தங்களுக்குள்ள வெற்றி வாய்ப்பு தொகுதிகள் குறித்து ஒரு முடிவுக்கு வரும். அதன்பிறகு, எந்த தொகுதி எந்த கட்சிக்கு என்று பிரித்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

பட்டியல் தயார்
தேமுதிக நேர்காணல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததுவிட்டது. எனவே அவர்கள் தங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்று பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனராம். கூட்டணி பற்றி அறிவிக்க திமுக நேர்காணல் முடிவுக்காக காத்திருக்கிறது தேமுதிக.

திமுக கூட்டணிக்கு விருப்பம்
தேமுதிக நேர்காணலின்போதும், மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தின்போதும், பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி அமைக்குமாறு விஜயகாந்த்தை வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications