மக்கள் விரோத அரசை அகற்ற சூளுரை ஏற்போம்: விஜயகாந்த் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் ஆட்சியை அகற்றி, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைய நாம் அனைவரும் இந்த நன்நாளில் சூளுரை ஏற்போம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இன்பம் பெருகும், துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஏழை எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக அரசு பதவி ஏற்றது முதல், தமிழக மக்கள் இருள்சூழ்ந்த கண்டத்தில் வாழ்வதாகவே கருதுகின்றனர். இந்த புத்தாண்டாவது இருண்ட கண்டத்தில் இருந்து வெளியேறி, வெளிச்சத்திற்கு வரும் ஆண்டாக அமைய வேண்டும். சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். அதுபோல தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் ஆட்சியை அகற்றி, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைய நாம் அனைவரும் இந்த நன்நாளில் சூளுரை ஏற்போம்.
உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். வரும் 2015ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்து, வாழ்வாங்கு வாழ வேண்டுமென தேமுதிக சார்பில் அனைவருக்கும் எனது இதயமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications