போராட்டக்காரர்கள் மீது தடியடி.. ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை: விஜயகாந்த்
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தல் ஆளும் கட்சியின் அணுகுமுறை சரியில்லை என்பதையே காட்டுவதாகவும் விஜய
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமுன் வரைவை போராட்டகாரர்களுக்கு முன் வாசித்து காட்டி இதை சட்டமாக மாற்றுவோம், அதை யாரும் தடை செய்ய முடியாது என்பதை முதல்வர் தெளிவுபடுத்தி இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை மெரினாவில் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் இன்று தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இதையடுத்து சிதறியோடிய மாணவர்கள் போலிசார் மீது கற்களை வீசினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
சென்னையின் பல இடங்களில் போலீசாரின் தடியடியைக் கண்டித்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் போலீசாரின் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடவடிக்கைகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தல் ஆளும் கட்சியின் அணுகுமுறை சரியில்லை என்பதையே காட்டுவதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை விட்டுள்ளார். அதில்,

அணுகுமுறை சரியில்லை
''சென்னை மாநகரம் முழுவதும் கண்ணீர் புகை குண்டு வீச்சு. போலீசார் தடியடி போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இந்த நிகழ்வுகளை பார்க்கும் போது ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை என்பதையே நிரூபிக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்களும், இளைஞர்களும் பெண்களும் பொதுமக்களும் அறவழியில் போராடியதன் விளைவாக மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இவர்கள் அடைந்துள்ளனர்.

தடை வந்துவிடும் என்ற ஐயம்
அதன் விளைவாக அவசர சட்டம் பிறப்பித்து தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு நடத்தலாம் என்று குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அரசு இன்று தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு நடைபெறும் என்ற அறிவிப்பு, போராட்டக்காரர்களுக்கு மிகப்பெரிய வெற்றி. அவரச சட்டம் என்பது தற்காலிகமானது, 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்துவிடும் என்ற ஐயம் அனைவர் மனதிலும் வந்ததன் விளைவாக போராட்டக்களத்தில் உள்ள இளைஞர்கள், போராட்டத்தை வாபஸ் வாங்க இயலாது என்று கூறிவிட்டனர்.

அரசு புரிய வைத்திருக்க வேண்டும்
போராட்டக்காரர்களின் ஐயத்தை தெளிவாக போக்கும் வண்ணம் இன்று சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுடன் சட்டமாக மாற்றப்படும் என்பதை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வந்த பிறகு, சட்ட நகல் நேரடியாக சென்றோ அல்லது அமைச்சர்கள், அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர்களுக்கு தெளிவாக அரசு தரப்பினர் புரிய வைத்திருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டமுன்வடிவை அவர்களுக்கு முன் வாசித்து காட்டி இதை சட்டமாக மாற்றுவோம் அதை யாரும் தடை செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்தி இருக்கவேண்டும்.

தானாக வாபஸ் பெற்றிருப்பார்கள்
அப்படி செய்திருந்தால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் புரிந்துகொண்டு அவர்களாகவே முன்வந்து வாபஸ் பெற்றிருப்பார்கள். அதுவே போராட்ட களத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அரசுக்கும் கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும். எனவே அரசாங்கம் உடனடியாக துரித நடவடிக்கையாக இதில் ஈடுபட்டு அறவழியில் போராடியவர்களின் உணர்வை மதித்து கலவரமாக மாறாமல் தடுத்து முதலமைச்சர் நேரடியாக போராட்டக்காரர்களை சந்தித்து சட்டமாக மாற்றப்படும் என்பதை தெளிவுபடுத்தி, போராட்டக்காரர்கள் தாங்களாகவே மனம் உவந்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
அதை விடுத்து வலுக்கட்டாயமாக யாரையும் அப்புறப்படுத்தும் செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இதை முன்கூட்டியே செய்திருந்தால் அவர்கள் கடலுக்குள் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. குடியரசுதின அணிவகுப்பும் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றிருக்கும், அனைவருக்கும் மகிழ்ச்சி தந்த இந்த போராட்டம் வெற்றி போராட்டமாக நிகழ்த்திய மன நிறைவு ஏற்பட்டிருக்கும்'' இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications