மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் வந்த வைகோ, விஜயகாந்த்
சென்னை: மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அருகருகே அமர்ந்து பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேற்று இரவு கயத்தாறில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் அஞ்சலி விழாவில் கலந்துகொண்டு விட்டு, இன்று காலை மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வருவதற்காக முன் பதிவு செய்திருந்தார்.அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில், வைகோ வந்தார்.

அதேபோல தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடைபெற்ற மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நேற்று பங்கேற்றார். இன்று காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் விஜயகாந்த். வைகோவும், விஜயகாந்தும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது இருவரும் பேசி சிரித்துக்கொண்டே பயணம் செய்ததை பயணிகள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. தேர்தலுக்குப் பின்னர் பாமகவும், மதிமுகவும் பாஜக அணியில் இருந்து பிரிந்து விட்டன. தேமுதிக தங்களின் அணியில்தான் இருக்கிறது என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
2016 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியினரிடையே கூட்டணி பேச்சுவார்தைகள் நடைபெற்று வருகின்றன. வைகோ ஒருங்கிணைப்பாளராக உள்ள மக்கள் நலன்காக்கும் கூட்டியக்கத்தில் விஜயகாந்த் வர வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வைகோ தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வைகோவும், விஜயகாந்தும் ஒரே விமானத்தில் பயணித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா தகுதியற்றவர்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருக்க தகுதியற்றவர் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர்கள் குறித்து ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா காலம் கடந்து கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி பேச நேரம் கோரியிருந்தேன் ஆனால் முதல்வர் ஜெயலலிதா தமக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications