தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்ட பாஜக- விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் இணையுமா?
சென்னை: தேமுதிக எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்களது தலைமையில் ஒரு வலுவான மாற்று அணியை அமைப்போம் என கூறி வந்தது பாஜக. ஆனால் விஜயகாந்த் தனித்துப் போட்டி- தங்களது தலைமையில் கூட்டணி என அறிவித்திருப்பதால் பாஜக விழிபிதுங்கி தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தேமுதிக, மதிமுக இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு பின் மதிமுக, இக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.

தேமுதிக, பாமக ஆகியவை பாஜக அணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதனால் பாஜக, சட்டசபை தேர்தலிலும் வலிமையான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என கூறிவந்தது.
அதேநேரத்தில் பாமகவோ, அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி எனக் கூறி 'செக்' வைத்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிகவை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட பாஜக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.
விஜயகாந்த்தை தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் சந்தித்து பேசிவந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பேச்சுவார்த்தையில் தேக்க நிலை உருவாகி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விளக்கம் அளித்த பிரேமலதா, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம் எனக் கூறி 'விஜயகாந்த் தலைமையில் கூட்டணி உருவாகும் என அறிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிகவின் முடிவு எங்களுக்கான தோல்வி அல்ல; அந்த முடிவை வரவேற்கிறோம். தற்போது 234 தொகுதிகளிலும் பாஜகவின் பலத்தை நிரூபிப்போம். தற்போது அவரவர் பலத்தைக் காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் எஸ்.ஆர். சேகரோ, விஜயகாந்த் இப்படி அறிவித்து பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மோடி மட்டும்தான் கேப்டன். பாஜகவைப் பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் தனித்து நின்றே பலத்தை காட்ட வேண்டும் என்பதே நிலைப்பாடு எனத் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கவும் தயார் எனவும் பாஜக கூறி இருந்தது. ஆகையால் பாஜக தனித்தே போட்டியிடுமா? அல்லது விஜயகாந்த், அன்புமணி இவர்களில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு அந்த கூட்டணியில் இணையுமா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications