விளாத்திக்குளம் மாணவி கொலை! "குழந்தையை சீரழிக்க எப்படி மனம் வந்தது?" கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது பிளஸ்-2 மாணவி, மறுநாள் காலை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

குற்றவாளி தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், அவரது சொந்த ஊரான சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கொதிப்பில் இருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சென்று, தர்ம முனீஸ்வரனின் வீட்டைச் சூழ்ந்தனர்.
வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்களைக் கற்களைக் கொண்டு எறிந்தும், கம்பிகளால் தாக்கியும் சூறையாடினர்.
நிலைமை கைமீறிச் சென்றதால், அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், மக்களின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கொலையாளி சிக்கியது எப்படி?
சம்பவ இடத்திற்கு அருகே 9-ம் தேதி முதல் நின்றிருந்த ஒரு பைக், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது எனத் தெரியவந்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் அதை முனீஸ்வரன் தான் ஓட்டி வந்தது உறுதியானது.
முன்னாள் கைதி: ஏற்கனவே 2020-ல் ஒரு மூதாட்டியைக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற இவர், உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார்.
மாணவியின் உடலை வாங்க மறுத்து 10 நாட்களாகப் போராடி வந்த உறவினர்கள், தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து உடலைப் பெற்றுக் கொள்ளச் சம்மதித்துள்ளனர். எனினும், ரவுடியின் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்தால் சாயல்குடி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications