கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை அடித்தேக் கொன்ற கிராம மக்கள்!
ஈரோடு அருகே கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை கிராம மக்களே அடித்துக் கொன்றுள்ளனர். இதுதொடர்பாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு: கவுந்தப்பாடியை அருகே உள்ள கோவில் ஒன்றில் திருட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த கிராம மக்கள் அவரை அடித்தே கொன்றுள்ளனர். இதுதொடர்பாக கிராம மக்கள் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த வளையக்காரன் பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்துள்ளனர்.

உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது 2 பேர் உண்டியலை உடைப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
கூட்டம் திரளவே அச்சமடைந்த கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டிச் சென்ற கிராம மக்கள் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அங்கு கட்டி வைத்து அந்த நபரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் மயக்கமடைந்த அந்த நபரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கொல்லப்பட்ட நபர் ஈரோட்டை அடுத்த ஆர்என்.புதூரை அடுத்த சிஎம்.நகரை சேர்ந்த 46 வயதான பழனிச்சாமி என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வளையக்காரன் பாளையத்தை சேர்ந்த 30 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் தப்பியோடிய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். கோவில் உண்டியலை திருட முயன்ற நபரை கிராம மக்களே அடித்துக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications