கடும் குடிநீர் தட்டுபாடு.. தவிக்கும் கிராம மக்கள்.. சாலை மறியலால் பரபரப்பு!
நாகை அருகே கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நாகை: வேதாரண்யம் அருகே கடும் தண்ணீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். முறையாக குடிநீர் வழங்கக்கோரி அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொது மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநிர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை பலர் திருட்டுத்தனமாக திருடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கிராம மக்கள் சாலை மறியல்
இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுப்பபடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆயக்காரபுலம் 2-ம் சேத்தி பகுதி மக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தண்ணீர் திருட்டு
அப்போது குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை கண்டறிந்து அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக குடிநீர் திருடியவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து அங்கு தொழிலாளர்கள் வரவழைக்கபட்டு குடிநீர் திருடும் மின் மோட்டார்கள் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை கண்ட பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications