விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு எதிரான மனுவை ஏற்ற நீதிமன்றம்
விழுப்புரம்: மனு கொடுத்த நபரை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆலங்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
உளுந்தூர்பேட்டையை அடுத்து உள்ளது தடுத்தாட்கொண்டூர் எம்.ஜி.ஆர். நகர். இங்குள்ள மலைக்குறவர் மக்கள் மீது வன்கொடுமை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர் சம்பத்திடம் மனு அளித்தோம். ஆனால் எங்களது மனு மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், இந்த சம்பவம் குறித்து கடந்த 10ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கேட்டபோது சம்பத் என்னை திட்டி, தாக்க முயற்சி செய்தார்.
நான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால், மனு கொடுத்து நீதி கேட்ட என் மீது தாக்குதல் நடத்த முயன்ற மாவட்ட கலெக்டர் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வெற்றிச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புகாரை பதிவு செய்து கொண்டது. மேலும், மாவட்ட கலெக்டர் சம்பத் தாக்கியதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க மனுதாருக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications