அவதூறு வழக்கில் ஆஜராகாத விஜயகாந்துக்கு விழுப்புரம் கோர்ட் கடும் கண்டனம்!!
விழுப்புரம்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் எரஞ்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது.
அப்போது விஜயகாந்த், பிரேமலதா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால் பார்த்தசாரதி, வெங்கடேசன் மட்டுமே ஆஜராகினர். விஜயகாந்த், பிரேமலதாவுக்காக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது, இந்த வழக்குக்காக பட்டியலில் உள்ள விழுப்புரம் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், புதிய வழக்கறிஞர் ஆஜராவது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் தொடர்ந்து ஆஜராகாமல் வழக்கை தாமதப்படுத்தி வருவதாகவும் நீதிபதி கண்டிப்பு தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணைக்கு விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராகி, உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளது குறித்த ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்றார். அப்போது வழக்கின் விசாரணையை இன்றைய தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத விஜயகாந்த், பிரேமலதாவுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது விஜயகாந்த், பிரேமலதா இருவரும் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.