ஜெ. சீட் கொடுத்தவர்கள் எல்லாம் 'சொக்கத் தங்கம்'.. விந்தியா பளிச் பேச்சு!
கரூர்: திமுகவில் சிறை சென்றவர்களுக்குச் சீட் கொடுதது போட்டியிட வைத்துள்ளனர். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. தூய்மையானவர்களுக்கு மட்டுமே முதல்வர் ஜெயலலிதா சீட் கொடுத்துள்ளார் என்று நடிகை விந்தியா பேசியுள்ளார்.
கரூர் அருகே நடந்த அதிமுக பிரசாரத்தின்போது விந்தியா பேசுகையில்,
கடந்த ஒன்பது ஆண்டாக மத்திய காங்., கட்சி கூட்டணியில் இருந்த தி.மு.க., ஓராண்டுக்கு முன் வெளியில் வந்தது. அதுவரை தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை கொடுக்கவிடாமல், தி.மு.க., முட்டுக்கட்டை போட்டது.
குஜராத் மாநிலத்தில் இருந்து மின்சாரம் கொண்டு வர கூட, தி.மு.க.,வின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காங்., அரசு மின்சார வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் தடுத்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திஹார் சிறைக்கு சென்ற ராஜாவுக்கு நீலகிரி தொகுதியிலும், ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னையிலும் போட்டியிட கருணாநிதி சீட் வழங்கியுள்ளார். கனிமொழிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுகவில் எந்த புகாரிலும் சிக்காத, தூய்மையான, தகுதி படைத்தவர்களுக்குதான் "சீட்' வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்ல இந்திய பிரச்னைகளுக்காக லோக்சபாவில் பேசிய, தம்பிதுரையை மீண்டும் வெற்றி பெற இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என்றார் அவர்.