ஓ.பி.எஸ் அணி ரிட்டர்ன் ஆனதால்... கூவத்தூரில் வன்முறை தவிர்ப்பு!
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பாதியிலேயே திரும்பி விட்டதால் கூவத்தூரில் வன்முறை வெடிப்பது தவிர்க்கப்பட்டது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூவத்தூர் செல்லும் முயற்சி பாதியிலேயே தடுக்கப்பட்டு விட்டதால், அங்கு வன்முறை வெடிப்பது தவிர்க்கப்பட்டது.
அதிமுக உடைந்து விட்ட நிலையில் தற்போது சசிகலாவும் சிறைக்குப் போகவுள்ளார். இந்தப் புதிய சூழலில் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்மையில் யார் பக்கம் உள்ளனர் என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை புதிய சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆனால் உண்மையில் அங்குள்ள எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிளம்பினர். இதனால் கூவத்தூரில் பெரும் மோதல் வெடிக்குமா என்ற அச்ச நிலை ஏற்பட்டது. ஏற்கனவே அங்குள்ள பல எம்.எல்.ஏக்கள் தங்களை வந்து முதல்வர் மீட்க வேண்டும் என்றுகூறி அவருக்கு தகவல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. முதல்வரும் கூட அதைக் கூறியிருந்தார்.
எனவே இவர்கள் அங்கு சென்றால் நிச்சயம் அவரது ஆதரவாளர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்பட்டது. போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோவளத்தோடு நிறுத்தப்பட்டு விட்டதால் பிரச்சினை தவிர்க்கப்பட்டது.