அம்மா என்றால் அன்பு... பேஸ்புக்கில் போட்டோவுடன் அன்னையர் தினம் கொண்டாடிய விஐபிகள்!
சென்னை: அன்னையர் தினத்தை இன்று மக்கள் விதம் விதமாக கொண்டாடி வருகிறார்கள். அதிலும் பேஸ்புக் வந்தது முதல் அதற்காக அன்னையர் தினத்தை பிரத்யேகமாக கொண்டாடுவோர் கூட்டம் கூடி விட்டது.
அன்னையர் தினத்தையொட்டி மக்கள் தங்களது அன்னையருக்கு அன்பு செலுத்தியும், நன்றி செலுத்தியும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
வழக்கம் போல இந்த அன்னையர் தினமும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியான ஒன்றுதான். இருப்பினும் இப்போது இதுவும் தீபாவளி, பொங்கல் போல இங்கு பிரபலமாகி விட்டது.

கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி தானும், தனது தாயும் இருப்பது போன்ற பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை தனது பேஸ்புக்கி் போட்டு அன்னையர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்.

சிலைக்கு மாலை
தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் சிலைக்கு மாலை போடுவது போலவும், அவருடன் இருப்பது போன்ற படத்தையும் கருணாநிதி தனது பேஸ்புக்கி் வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலினின் அன்னையர் தினம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அன்னையர் தினத்தை தனது தாயார் தயாளு அம்மாளுவுடன் கொண்டாடி புகைப்படம் எடுத்துப் போட்டுள்ளார். தயாளு அம்மாளுவிடம் ஸ்டாலினும், அவரது மனைவியும் ஆசிர்வாதமும் வாங்கியுள்ளனர். புதுப் புடவையும் கொடுத்துள்ளார் ஸ்டாலின் தனது தாய்க்கு.

ஸ்டாலின் கவிதை
மேலும் மு.க.ஸ்டாலின் ஒரு கவிதையும் எழுதியுள்ளார். என் சேயும் நீயே என்ற பெயரில் அந்தக் கவிதை மலர்ந்துள்ளது.

கல்லும் மண்ணும் கலந்து
அந்தக் கவிதை.. அம்மாவின் அன்பு தான் கல்லும் மண்ணும் கலந்து கட்டப்படும் ஒரு கட்டிடத்தை வீடாக மாற்றுகிறது. எந்த ஊருக்கு போனாலும், எங்கு சுற்றிவிட்டு வந்தாலும், பாதுகாப்பான ஒரு கூடாக, கோடை நிழலாக வீட்டை அன்பால் நிரப்புவது தாயின் பாசம் தான்.

மரத்திலிருந்து உதிரும் பூக்களைப் போல
மரத்திலிருந்து உதிரும் பூக்களைப் போல் என் தாயின் நினைவுகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
சமீப காலங்களில் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குழந்தையைப் போல் எனக்கு ஒரு புடவை வாங்கித் தா என்று அவர் கேட்கும் போதெல்லாம், தன் வாழ் நாள் எல்லாம் தனக்கு என்று எதையும் கேட்கத் தெரியாத அம்மா தான் நினைவுக்கு வருகிறார்.

லட்சக்கணக்கான உடன் பிறப்புகளுக்கு அண்ணியாக
எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரின் தேவைகளையும் அறிந்து அதை நிறைவேற்றித் தந்த அம்மா. மனைவியாய், மருமகளாய், தாயார், சகோதரியாய், மாமியாராய், பாட்டியாய் எல்லாவற்றையும் விட முக்கியமாய் தலைவரின் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு அண்ணியாய்த் தன் வாழ்நாளை வாழ்ந்திடும் அம்மா.

கண்ணோரம் நீர்த்துளி
என் கண்ணோரங்களில் திரளும் நீர்த் துளிகளை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொள்கிறேன். அம்மா ஒரு குழந்தையைப் போல் என் கைகளை அழுத்திப் பற்றிக் கொள்கிறார். அதில் என் தாயை மட்டுமல்ல- இன்று என் மகளையும் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

இமான்
இசையமைப்பாளர் டி. இமான் தனது தாயாருடன் இருக்கும் படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டு அன்னையர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications