புஷ்பவனம் குப்புசாமியின் பாடலைக் கேட்டபடியே காலமானார் 'ஆனாரூனா'- வைரலாகும் வீடியோ
சென்னை: அடையாறு மாணவர் நகல உரிமையாளரும் தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனருமான அருணாசலம் என்ற ஆனாரூனா தமது வாழ்வின் கடைசி சுவாசத்தை புஷ்பவன் குப்புசாமியின் பாடலைக் கேட்டபடியே நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரசு அதிகாரியாக வாழ்க்கையை தொடங்கி அடையாறு மாணவர் நகலம் மூலம் தொழிலதிபர் ஆனவர் அருணாசலம். தமிழ்ச் சான்றோர் பேரவை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றை உருவாக்கியவர். நந்தன் வழி என்ற இதழையும் நடத்தியவர்.
ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி தமிழகம் உருவான நாளை தமிழகப் பெருவிழாவாக சிறப்புடன் நடத்தினார். தமிழிசை மன்றம் மூலமாக எண்ணற்ற கிராமிய கலைஞர்கள் ஏற்றம் பெற உதவினார். அவர் அறிமுகப்படுத்திய பாடகர்தான் புஷ்பவன் குப்புசாமி.
அருணாசலம் மகன் சவுரிராஜன் தமிழ் இணைய இதழ்களின் முன்னோடியான Intamm இணையதளத்தை உருவாக்கியவர். அருணாசலம் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். படுத்தபடுக்கையாக இருந்த நிலையில் கடந்த திங்களன்று அவர் காலமானார்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய பாடலை புஷ்பவனம் குப்புசாமியின் பாடல்களைக் கேட்டபடியே கண்மூடினார் அருணாசலம். அவரது அந்த கடைசி நிமிடங்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications