"கொஞ்சம் நடிங்க பாஸ்".. விருதுநகர் இளைஞரை உசுப்பேத்தி ரூ. 95,000 மோசடி!
விருதுநகர்: விருதுநகர் இளைஞர் ஒருவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 95 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே மேலஆமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவர் வேதியியல் துறை முதுகலை பட்டதாரி ஆவார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து இவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
தொலைக்காட்சியில் பணி:
அதில், ஒருவர் தான் கிசோன் காமராஜ் பேசுவதாகவும், பிரசித்தி பெற்ற தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிப்பதற்கு வாய்ப்பு:
அதோடு, திரைப்படத்துறையில் நன்கு அறிமுகம் உள்ளதாகவும் கூறி நடிப்பதற்கு வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்.
95 ஆயிரம் ரூபாய் பணம்:
இதைத் தொடர்ந்து நடிப்பதற்கு பணம் தேவையென அந்த பிரமுகர் கேட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பரில் விருதுநகர் கனரா வங்கி மூலம் ரூபாய் 88 ஆயிரமும், அதன் பின்னர் மீண்டும் எஸ்பிஐ வங்கியின் மூலம் ரூபாய் 7 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.
வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பு:
குறிப்பிட்ட நாள்கள் கடந்த பின்னும் இதுவரையில் வாய்ப்பு வாங்கித் தரமால் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, தொடர்பு கொண்டு வாய்ப்பு தாருங்கள், இல்லையென்றால் பணத்தை திருப்பித் தரும்படி மாரீஸ்வரன் கேட்டுள்ளார்.
மிரட்டலால் அதிர்ச்சி:
அதையடுத்து சென்னை வடபழனிக்கு புறப்பட்டு வரும் படி கூறியதை தொடர்ந்து உடனே புறப்பட்டுச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் நிற்பதாக கூறி தொடர்பு கொண்டதற்கு, இங்கு எதற்கு வந்தாய் எனக் கூறி உடனே திரும்ப செல்லும் படியும் கூறி மிரட்டியுள்ளார்.
ஏமாற்றப்பட்ட மாரீஸ்வரன்:
பின் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது கைபேசியின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
விருதுநகரில் புகார்:
இது தொடர்பாக மாரீஸ்வரன் விருதுநகர் ஜே.எம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மனுவை விசாரித்த நீதிபதி உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை:
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் திரைப்பட பிரமுகர் கிசோன் காமராஜ் மீது வழக்கு பதிந்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications