டிடிவி தினகரனைச் சந்தித்த கையோடு எடப்பாடிக்கு நன்றிக் கடிதம்... விஷாலின் பலே அரசியல்!
சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்வேன் என்று டிடிவி தினகரன் சொல்லி முடித்த சில நிமிடங்களில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிக் கடிதம் எழுதியுள்ளார் நடிகர் விஷால்.
நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா - க்ரித்தீஷ் திருமணம் ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நேரில் செல்ல முடியாததால், வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதேபோல அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் திருமணத்துக்கு நேரில் வரவில்லை. எனவே இன்று காலை விஷால் வீட்டுக்கே போய் மணமக்களை வாழ்த்திவிட்டு, "சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்வேன்," என்று சொல்லிவிட்டு வந்தார். தினகரனின் இந்தப் பேச்சு பரபரப்பைக் கிளப்பியது.
இதைச் சமாளிக்கவோ என்னமோ... தினகரன் கிளம்பிச் சென்ற அடுத்த சில நிமிடங்கள் விஷாலிடமிருந்து வேகமாக ஒரு அறிக்கை வந்துள்ளது. அதில், தங்கை திருமணத்துக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய முதல்வருக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "முதல்வரின் வாழ்த்து மடலைக் கண்டு குடும்பத்தினர் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தினகரனின் திடீர் வருகை, அரசியல் அழைப்பு போன்ற செய்திகள் முதல்வர் தரப்பைக் கோபப்படுத்திவிடுமோ என்ன எண்ணத்தில் இந்தக் கடிதத்தை விஷால் வெளியிட்டிருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications