மனசாட்சிப்படி வாக்களியுங்கள்...! - விஷால், சரத்குமார் கோரிக்கை
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் நடிகர் - நடிகையர் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே கோரிக்கையை சரத்குமாரும் வாக்காளர் முன் வைத்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் சற்று முன் சென்னை செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்களிக்க வரும் நட்சத்திரங்களைக் காண பொதுமக்கள் திரண்டு நிற்கின்றனர்.
இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் இன்றைய சூழல், மாற்றம் தேவைப்படுவதன் பின்னணி மற்றும் அவசியத்தை மனதில் கொண்டு வாக்களியுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிரணியைச் சேர்ந்த சரத்குமாரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
"நீங்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்குச் சீட்டைக் கையில் வாங்கியதும் சில நொடிகள் கண்களை மூடி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என யோசியுங்கள். உங்கள் மனசாட்சிப்படி வாக்களித்து எங்களை வெற்றிப் பெற வையுங்கள்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் - நடிகைகள் மனசாட்சி என்னவென்பது இன்று இரவு 9 மணிக்குத் தெரிந்துவிடும்.