விஷால் தரப்பு சேரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
விஷால் தரப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சேரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
Recommended Video
சென்னை: விஷால் தரப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சேரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் விலக வேண்டும் என இயக்குநர் சேரன் போர்க்கொடி தூக்கியுள்ளார். தனது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் அவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் விஷால் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் கூறினார். இதைத்தொடர்ந்து சேரனுக்கு நடிகர் விஷால் பதில் தெரிவித்துள்ளார்.
எந்த விதியும் இல்லை
அதில் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று அவர் கூறினார். மேலும் சேரன் வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டு ஆரோக்கியமான மனோபாவத்திற்கு மாற வேண்டும் என்றும் விஷால் தெரிவித்தார்.
சட்டப்படி நடவடிக்கை
கீழ்த்தரமான விமர்சனங்கள் மூலம் விளம்பரம் தேட சேரன் முயற்சிக்கிறார் என்றும் விஷால் குற்றம்சாட்டினார். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்தார்.
சங்க உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை
இந்நிலையில் விஷால் தரப்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சேரனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்க உறுப்பினர்கள் அன்பு, கஃப்பார், உதயா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
நேரில் வந்தால் மட்டுமே..
பொதுக்குழுவில் பேசி முடிவெடுக்கலாம் என்ற விஷால் தரப்பு கோரிக்கையை ஏற்க சேரன் மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும்
விஷால் நேரில் வந்தால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என சேரன் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி
இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. இதனால் சேரனின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.