லோக்சபா தேர்தல்: அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கப் போகும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் யாரும் ஜெயிக்க முடியாது என்று தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக அரசின் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது.
மரியாதை இல்லையே...
தேமுதிகவில் எம்.எல்.ஏ.க் களுக்கு மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை. எனவேதான் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள்..
எங்க கோஷ்டியில 8 வது ஆள்
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் நேற்று அருண் சுப்பிரமணியம் சேர்ந்து இருக்கிறார். ஏற்கனவே 7 பேர் இருக்கிறோம். 8 வதாக அவர் எங்களுடன் சேர்ந்து செயல்படுவார்.
எங்களை நீக்க முடியுமா?
பா.ம.க. எம்.எல்.ஏ., கலையரசு முதல்வரை சந்தித்ததால், அவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அது போல எங்களை கட்சியில் இருந்து நீக்க விஜயகாந்துக்கு தைரியம் இருக்கிறதா?. அருண் சுப்ரமணியம் கட்சிப் பதவியில் இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறார்.
யாரும் ஜெயிக்க முடியாது
லோக்சபா தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி பேசுவதாக கூறிக் கொண்டு பேரம் பேசி வருகிறார். அவருடன் சேர்ந்தவர்கள் வெற்றி பெற முடியாது.
அம்மாவுக்கு ஓட்டு கேட்போம்
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவோம். அனைத்து தொகுதிகளுக்கும் சென்று அ.தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம். முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வரும் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்வோம்.
சாதனைகளை கூறுவோம்
முதல்வர் ஜெயலலிதா எங்க ளுக்கு பிரசாரம் செய்தார். அ.தி.மு.க.வினரும் பாடுபட்டதால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம். அ.தி.மு.க. வினரும் எங்களுக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.
ராஜினாமா செய்ய மாட்டோம்
முதல்வரை சந்தித்து தொகுதியின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதால், தொகுதி மக்கள் எங்களை பாராட்டுகிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ.
அதிமுகவிற்கு ஓட்டு கேட்ட சுந்தரராஜன்
கடந்த மாதம் மதுரையில் வணிகர்கள் மத்தியில் பேசிய தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ சுந்தரராஜன், மேடையிலேயே அதிமுகவிற்கு ஓட்டு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.