2011 ல் 78.1%... 2014ல் 73.07%... 2016 ல் 63. 70%: தமிழகம் 3 மணி நிலவரம் வாக்குப்பதிவு ஒப்பீடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும் போது 15% குறைவாகும். மழை, மின்வெட்டு பிரச்சினை காரணமாகவே வாக்குப்பதிவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 100% வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பூத் சிலிப் மட்டுமல்லாது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.

வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் இயற்கை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு சோதனை வந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஞாயிறு இரவு முதல் பெய்த மழை 15 மாவட்டங்களில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வர விடாமல் தடுத்தது.
மழை ஒரு பக்கம் மிரட்ட அதையும் தாண்டி குடையோடு ஓட்டு போட வந்தவர்களை எரிச்சலடையச் செய்தது மின் வெட்டு பிரச்சினை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குத்து மதிப்பாக குத்தி விட்டுதான் வந்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.
காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கினாலும் பிற்பகல் 3 மணிவரை 36.70% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக குத்துமதிப்பாக ஒரு கணக்கு சொன்னார் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. தேர்தல் அதிகாரிகள் எஸ்.எம்.எஸ் அனுப்புவதில் உள்ள சிரமத்தால் தகவல்கள் வந்து சேருவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறினார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணிக்கு 78.01% வாக்குகள் பதிவாகியிருந்தன. இதேபோல 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போதும் தமிழகத்தில் 73.07% பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு 63.70% ஆக உள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, 15 மாவட்டங்களில் பெய்த மழையும், அதோடு பல வாக்குச்சாவடிகளில் மின் வெட்டு பிரச்சினையும் வாக்காளர்களை வரவிடாமல் செய்து விட்டது என்கின்றனர் தேர்தல் அதிகாரிகள்.
வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது ஆளுங்கட்சிக்கு சாதகமா? எதிர்கட்சிக்கு சாதகமா? மே 19ம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications