தமிழக சிறைகளில், மூன்றில் ஒரு கைதி தலித் சமூகத்தை சேர்ந்தவர்! காரணம் என்ன?
தமிழகத்தில் 3ல் ஒரு சிறைக் கைதி தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூன்றில் ஒருவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்ற புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக்க ஜாதியினரின் பலிகடாவாக தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் மாற்றப்படுகிறார்கள், என்ற பரவலான குற்றச்சாட்டுக்கு, இந்த புள்ளி விவரம் வலு சேர்ப்பதாக உள்ளது.
'சிறைச்சாலை புள்ளி விவரம் இந்தியா 2015' என்ற தலைப்பிலான தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை இந்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில், தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதில், சுமார் 35.25 சதவீதம், விசாரணை கைதிகளில் 36.44 சதவீதம் பேர் தலித்துகள்தானாம். ஆங்கில நாளிதழ் ஒன்று இத்தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, தண்டனை பெற்ற கைதிகள் எண்ணிக்கை 4966 என்றும், அதில், 1750 பேர் தலித்துகள் என்றும், 158 பேர் பழங்குடியினர் என்றும், 2573 பேர் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிறர் 485 என்றும் தெரியவந்துள்ளது. விசாரணை கைதிகளாக அடைபட்டுள்ள 7850 பேரில், 2861 பேர் தலித்துகள் என்றும், 169 பேர் தாழ்த்தப்பட்டோர் என்றும், 4320 பேர் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்தவர்கள் என்றும், பிறர் 500 பேர் என்றும் தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்த எவிடென்ஸ் என்ற என்ஜிஓ செயல் தலைவர் கதிர் கூறுகையில், சிறையில் அதிகப்படியான தலித்துகள் அடைக்கப்பட்டுள்ளது, இந்த சமூகத்திலுள்ள ஜாதி ஏற்றத்தாழ்வையே காண்பிக்கிறது. கேட்பாரற்ற தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள், போலீசாரின் நடவடிக்கைக்கு பலியாகிறார்கள். சிறு குற்றங்களுக்கும் போலீசார் இவர்களைதான் கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது என்றார்.
தமிழக மக்கள் தொகையில் பழங்குடியினர் எண்ணிக்கை 1 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால் தண்டனை கைதிகள் எண்ணிக்கையில் இவர்கள் 3.18 சதவீதமாக இருப்பது இதுபோன்ற சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்துகிறது.
மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினரும், மாநில பழங்குடியினர் சங்க உப தலைவருமான பி.சண்முகம் கூறுகையில், தீர்க்கப்படாத திருட்டு வழக்குகளை பழங்குடியின மக்கள் தலையில் கட்டுவது காவல்துறை வழக்கமாக உள்ளது. இருளர்கள், குரவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குரவர் ஜாதியை சேர்ந்த ஆண்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன என்றார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ஜாதியை பார்த்து தாங்கள் கைது செய்வதில்லை எனவும், குற்றங்களில் ஈடுபடுபவர்களைதான் கைது செய்கிறோம் எனவும் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications