யாருக்கு ஓட்டு போட்டீர்கள்? பெயர், சின்னத்தோடு ரசீது வந்துவிடும்.. ஆர்.கே.நகர் தேர்தலில் அசத்தல்
சென்னை: யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ள வசதியாக ரசீது கொடுக்கும் வசதியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.
VVPAT EVM என்று அழைக்கப்படும் இந்த இயந்திரங்களில், யாருக்கு வாக்களிக்கிறோமோ அவரின் பெயர், சின்னம் ஆகியவை பிரிண்டர் மூலம் ரசீதாக வெளியே வந்துவிடும். அதை வைத்து நாம் வாக்களித்த நபருக்குதான், சரியாக, வாக்குப்பதிவு இயந்திரம் பதிவு செய்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அதேநேரம், இந்த ரசீது வாக்காளர்கள் கைக்கு தரப்படாது. இந்த ரசீது, தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பத்திரமாக வைத்துக்கொள்ளப்பட்டிருக்கும். சர்ச்சைகள், புகார்கள் ஏதேனும் எழுந்தால் அப்போது அது ஆதாரமாக பயன்படும்.

உ.பி.யில் தகராறு
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டு எழாது என நம்பலாம்.

வாக்குச்சீட்டு இல்லை
மொத்தம் 82 வேட்பாளரர்கள் களம் காணும் ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தனை அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்கு சீ்டடு மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாகவே தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களமிறங்கும் ஓ.பி.எஸ்
ஆர்.கே.நகரில் மொத்தம் 2 லட்சத்து 62ஆயிரத்து 721 வாக்காளர்கள் உள்ளனர். அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில், போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து, ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் ஆரம்பித்துள்ளார். அதேநேரம், டிடிவி தினகரன் தான்தான் வெற்றிபெறப்போவதாக கூறிவருகிறார்.

முறைகேடு புகார்
ஆனால், இவ்விரு தரப்புமே முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும், திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications