ஜெயலலிதா படம் பொறித்த சுவர் கடிகாரங்கள் பறிமுதல்: கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி !
கரூர்: கரூரில் தனியார் தொலைக்காட்சி நிருபர் குடியிருக்கும் வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 695 சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.
கரூர் தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் சொர்ணமாணிக்கம் தலைமையிலான குழுவினர், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள தனியார் தொலைக் காட்சி நிருபர் பத்மநாபன் குடியிருக்கும் பகுதியில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, 18 அட்டைப் பெட்டிகளில் சுவர் கடிகாரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை சோதனை செய்தபோது அந்த கடிகாரங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுடன் வி.செந்தில்பாலாஜி, மாவட்டச் செயலாளர், போக்குவரத்துத் துறை அமைச்சர் என அச்சிடப்பட்டுள்ளது.
இதையடுத்து 695 சுவர்க் கடிகாரங்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை கரூர் நகர போலீஸில் ஒப்படைத்தனர். கடந்த ஆண்டு ஆசிரியர் தின விழாவையொட்டி, ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக இந்த சுவர்க் கடிகாரங்கள் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.