'ரோபோ' ரஜினி, 'நண்பன்' விஜய்-ன்னு நெனப்பு.. ஒரு பெண்ணை அநியாயமா கொன்னுட்டீங்களே!
திருப்பூரில் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தார்
Recommended Video
திருப்பூர்: செய்ய வேண்டியதுதான்.. ஆனால் அதற்காக இப்படியா... விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்தாலும்கூட அதை சிலருக்கு முறையாக பயன்படுத்தி கொள்ள தெரிவதேயில்லை. அப்படி நடந்த சம்பவம்தான் இது.
திருப்பூர் அருகே உள்ள ஊர் நல்லூர் புதுப்பாளையம். இங்கு வசித்து வருபவர் கார்த்திக். இவரது மனைவி கிருத்திகா. இருவருக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது. கார்த்திக், அங்கேயே ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும், கிருத்திகா தனியார் பள்ளி ஆசிரியையாகவும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கிருத்திகா கர்ப்பமானார். இந்த விஷயத்தை குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எல்லாரிடத்திலும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் கார்த்திக்.
வீட்டிலேயே பிரசவம்
தனக்கு மிகவும் நெருக்கமான நண்பரான ப்ரவீனிடத்திலும் இதை சொன்னார். ப்ரவீன், கார்த்திக்கு க்ளோஸ் பிரண்ட். அடிக்கடி வீட்டுக்கும் வந்து செல்பவர். வீட்டுக்கு வந்து நண்பனை பார்த்தாமோ போனோமா என்றில்லாமல், கிருத்திகாவின் பிரசவத்திற்கு டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஒருமுறை இல்லை. வீட்டுக்கு எப்போ வந்தாலும் சரி, பிரசவ டிப்ஸ்தான். "கார்த்திகாவை ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் கூட்டிட்டு போகாதே கார்த்திக். வீட்லயே வெச்சி பிரசவம் பாத்துக்கலாம். அந்த காலத்தில எல்லாம் ஹாஸ்பிடலா இருந்துச்சு.
ப்ரவீன் கொடுத்த டிப்ஸ்
வீட்லயே எத்தனை குழந்தைகள் சுகபிரசவமா பொறந்தது? அதே மாதிரி செக்-அப்புக்குன்னு போனா, மாச மாசம் வரச்சொல்லிடுவாங்க. அப்படி போய்ட்டா, அவங்க ஆஸ்பத்திரிக்கே டெலிவரிக்கு வரச்சொல்லிடுவாங்க. ஒருவேளை டெலிவரி டைம் நெருங்கிட்டா கூட ஹாஸ்பிடல் போகாதே. நமக்கு இருக்கவே இருக்கு யூ-டூப் சேனல். அதுல ஒரு தட்டு தட்டினா, அந்த காலத்துல எப்படி பிரசவம் பார்த்தாங்கன்னு மொத்த விவரமும் வந்துடப்போகுது" என்று சொல்லி இருக்கிறார். ப்ரவீன் கொடுத்த டிப்ஸ், ஐடியாக்களுக்கெல்லாம் கார்த்திக் மண்டையை ஆட்டி உள்ளார். ஆனால் கிருத்திகா மட்டும் இது சரியில்லை, வேண்டாம் என்று பயந்திருக்கிறார்.
யூ-டியூப் பிரசவம்
ஆனால் இருவரும் சேர்ந்து அவர் மனதையும் மாற்றி பிரசவ நேரத்தில் யூ-டியூப்தான் என்று ட்யூன் செய்து விட்டனர். பாவம் அந்த பெண்ணை, கர்ப்பமான நாளிலிருந்து ஒருமுறைகூட செக்அப்-க்கு கூட்டிட்டு போகவே இல்லை கார்த்திக். கார்த்திகாவின் அம்மா வீட்டில் எவ்வளவோ சொல்லி பார்த்தாயிற்று, திட்டி பார்த்தாயிற்று, அறிவுரை சொல்லி பார்த்தாயிற்று. எதுவுமே கார்த்திக் முன் எடுபடவில்லை. இப்படியே பிரசவ நாள் நெருங்கி, வலியும் வந்துவிட்டது. வலியால் கிருத்திகா துடிக்க, உடனே கார்த்திக்கும், ப்ரவீனும், ஏற்கனவே செல்போனில் ரெடியா வைச்சிருந்த பிரசவம் பார்க்கும் வீடியோவை ஓடவிட்டனர். வீடியோவில் செய்வதை பார்த்து அதுபோலவே கார்த்திகாவுக்கு செய்தனர். இருவரும் அந்த பெண்ணை படாதபாடு படுத்தி குழந்தையை ஒருவழியாக வெளியே இழுத்தனர்.
சாகடித்தே விட்டனர்
இவர்கள் செய்த காரியங்களால் அந்த குழந்தைக்கு உடலெங்கும் படுகாயங்கள் ஏற்பட்டு உயிர் மட்டும் பிழைத்துள்ளது. ஆனால் வலி பொறுக்க முடியாமல், அலறி துடித்து, கதறி வெடித்து, கடைசியில் கார்த்திகா மூச்சே நின்றுபோனது. படுபாவிகள் அந்த பெண்ணை சாகடித்தே விட்டனர். இந்த கொடூர சம்பவம் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை கையிலெடுத்துள்ளனர். மேலும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுகுறித்த தீவிரமான நடவடிக்கைகளிலும் இறங்கினர். இதையடுத்து கிருத்திகாவின் மரணம் இயற்கைக்கு எதிரான மரணம் என்று போலீஸார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
மருத்துவச்சிகள் இல்லையே!
முன்பெல்லாம் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது என்பது சாதாரணமான விஷயம்தான். லட்சக்கணக்கான குழந்தைகள் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வலம் வந்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் மருத்துவச்சிகள் என்னும் கிராமத்து "டாக்டர் ஆயாக்கள்"தான். ஒரு தாய் கருவுற்றது முதல், குழந்தை பிறக்கும்வரை ஒவ்வொரு கர்ப்பிணியின் ஒவ்வொரு அசைவுகளையும் நாடி பிடித்தும், வயிற்றை தடவி பார்த்துமே குழந்தையின் வளர்ச்சியை சொல்லிவிடுவார்கள். அதில் அவர்கள் கைதேர்ந்தும் இருந்தார்கள். குழந்தை பிறந்தாலும் சிறிது காலம் அவர்களது பணி குழந்தையுடன் தொடரத்தான் செய்யும். பிறந்த குழந்தையை குளிக்க வைப்பது, குழந்தைக்கு உடம்பில் எங்காவது பிடித்துகொண்டால் அதை தன் முகவாயை கொண்டே நீவிவிடுவது, திருஷ்டி கழிப்பது, என பலவற்றை வெகு நேர்த்தியாக செய்தார்கள். இவர்கள் இப்போது இல்லை.
ரோபோ ரஜினியோ?
அதுபோன்ற மருத்துவச்சிகள் இருந்தால்கூட ப்ரவீன் சொன்னதை அங்கீகரித்திருக்கலாம். 10 மாத போராட்டத்தில் ஒரு பெண்ணுக்கு எவ்வளவோ தொந்தரவுகள் வந்துபோகும். இதெல்லாம் ஆண்களுக்கு புரியுமா என்ன? 'ரோபோ' படத்தில் ரஜினி பிரசவம் பார்த்ததையும், 'நண்பன்' படத்தில் விஜய் பிரசவம் பார்த்தையும் நினைத்துவிட்டு பிரசவ வலியை தப்பு கணக்கு போட்டுவிட்டார்களா என தெரியவில்லை. இதுபோன்ற காரியத்தை முட்டாள்தனம் என்றும், இவர்கள் இருவரையும் மடையர்கள் என்றும் எப்படி சொல்லாமல் இருப்பது?