சென்னையை நெருங்குகிறது குடிநீர் பஞ்சம்.. 40 நாளுக்கு தேவையான நீர்தான் இருக்கிறதாம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 40 நாட்களுக்கு தேவையான நீர் மட்டுமே இருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அடுத்த 40 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் பூமி காய்ந்து வருகிறது. ஏரிகளில் இருக்கும் நீரும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மள மளவென குறைந்து வருகிறது.
இதனால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் உள்ள நீர் வேகமாக குறைந்து வருகிறது.
சோழவரம் ஏரி
சோழவரம் ஏரியில் உள்ள தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. அதில் உள்ள மதகு பகுதியை விட கீழ் நிலைக்கு நீர் சென்றுவிட்டது. இதனால், 3 ராட்சத மோட்டார்கள் வைத்து நீர் உறிஞ்சப்பட்டு பின்னர் புழல் ஏரிக்கு செல்லும் கால்வாயில் சேர்க்கப்படுகிறது. கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதன் மூலம் தினசரி 18 கனஅடி நீர் கிடைக்கிறது. மோட்டார் வைத்து நீர் உறிஞ்சப்படுவதும் அடுத்த மாதம் 12ம் தேதி வரை மட்டுமே செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புழல் ஏரி
சோழவரம் ஏரியில் மோட்டார் கொண்டு நீர் உறிஞ்சப்படுவது போன்றே புழல் ஏரியிலும் மோட்டார் வைத்து நீர் உறிஞ்ச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 9 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள சில சிறிய ஏரிகளிலும் நீர் உறிஞ்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
40 நாட்கள் மட்டுமே..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். தற்போதைய சூழ்நிலையில் 1.678 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இந்த 4 ஏரிகளில் இருப்பு உள்ளது. இதை வைத்துக் கொண்டு அடுத்த 40 நாட்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வீராணம் ஏரி
இதே போன்று வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு வறண்டு போய் உள்ளது. நெய்வேலியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
உதவும் கிருஷ்ணா
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி வரை 2 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட்டு இருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆந்திர அரசு தண்ணீர் திறந்துவிட்டது.
சமாளிப்பு
கிருஷ்ணா தண்ணீர் கொடுக்கப்பட்டு வருவதால் ஓரளவு நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடிகிறது என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு நீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலை உள்ளது. மேலும், மே மாதத்தில் 1 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தருவதாக கூறியிருப்பதால் நீர் பற்றாக்குறையை கொஞ்சம் சமாளிக்க முடியும்.
ஐந்தில் ஒரு பங்கு
வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஏரிகளிலும் தண்ணீர் மட்டம் உயரவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் 8.331 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. இது, கடந்த ஆண்டு இருந்த நீரோடு ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்கு அளவுதான் உள்ளது.