கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்று படுகையில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணையாறு பாய்கிறது. காவிரி ஆறு தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தென்மேற்கு பகுதி வழியாக சென்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கலக்கிறது.
கர்நாடக மாநிலம், நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. இந்த ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக கடலூர் மாவட்டத்திற்கு சென்று கடலில் கலக்கிறது.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 51.20 அடியை எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 899 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால், கிருஷ்ணகிரி அணை கடல் போல் காணப்படுகிறது. அணையிலிருந்து 513 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதே அளவுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்தால், அணை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, தென்பெண்ணை ஆறு செல்லும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை 9-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.