கர்நாடகாவில் கனமழை எதிரொலி... மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வு
சேலம்: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர்ந்து அங்கு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே, இந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும், மழை நீரும் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்து வருகிறது.

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,500 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்த அளவானது படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை வினாடிக்கு 5000 கனடியாக உயர்ந்தது.
இந்த நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 4,712 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 44.69 அடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப் படும் தண்ணீரின் அளவும் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே, அதிக நீர்வரத்தால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் அதிகம் கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications