கட்டு கட்டாய் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி: வாட்ஸ் அப்பில் வைரல் ஆன வீடியோ
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், ஒப்பந்ததாரரிடம் கட்டுக் கட்டாய் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் உள்ள கோட்ட பொறியாளர் சிதம்பரம் என்பவர்தான் ஒப்பந்ததாரரிடம் பணி வழங்க கட்டு கட்டாக பணத்தை வாங்கியவர். இந்த வீடியோ காட்சி தான் தற்போது வாட்ஸ் அப்பில் உலா வருகின்றன.
அரசு வேலை, ஒப்பந்தப் பணி போன்றவற்றில் ஈடுபடுவோர் லஞ்சம் கேட்டால் அவர்களை கையும் களவுமாக பிடிக்கும் பணிக்கென லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளனர். ஆனால் இப்போது அந்த வேலையை நவீன காமிராக்களும், செல்போன் உபகரணங்களும் செய்து விடுகின்றன. லஞ்சம் கொடுப்போரே அதனை ரகசியமாக படம் பிடித்து ஊடகங்களுக்குக் கொடுத்து விடுகின்றனர். அதுவும் வாட்ஸ் அப் வந்தாலும் வந்தது. உடனே மூலை முடுக்கெல்லாம் பரவி பட்டையை கிளப்புகிறது.

பொதுப்பணித்துறையில் லஞ்சம்
அந்த வகையில், தேனி மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ஒப்பந்தத்தாரரிடம் பணம் கேட்டு நச்சரிக்கும் உரையாடல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வாட்ஸ் அப்'பில் வெளியானது. அந்த அதிகாரி யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான ஒரு ப்ளெக்ஸ் போர்டும் சென்னையில் வைக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ந்து போன அதிகாரிகள் அந்த தட்டிப்போர்டை அங்கிருந்து அகற்றினர்.

வாட்ஸ் அப் வீடியோ
இந்த நிலையில் நேற்று குமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் ஒப்பந்தத்தாரரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் ‘வாட்ஸ் அப்'பில் வேகமாக பரவியது. 48 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒப்பந்தத்தாரர், பொறியாளர் சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு சென்று அவரோடு பேசிக்கொண்டிருக்கிறார். அதிகாரி கையில் பேனாவை உருட்டியபடி ஒப்பந்தத்தாரரிடம் பேரம் பேசுகிறார். சில வினாடிகள் கடந்ததும், ஒப்பந்தத்தாரர் தயாராக வைத்திருந்த பணக்கட்டை எடுத்து பொறியாளரிடம் கொடுக்கிறார். அதில், 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஒரே கட்டாக கட்டப்பட்டிருந்தது. அதனை மேலும் கீழும் பார்த்த அதிகாரி, அந்த பணம் எவ்வளவு இருக்கும் என்பதை குத்து மதிப்பாக எண்ணிப்பார்க்கிறார். பின்னர் அதனை தனது கைப்பையில் வைக்கிறார். அத்துடன் காட்சி முடிகிறது. இந்த வீடியோ காட்சியில் ஒப்பந்தத்தாரரின் உருவம் பதிவாகவில்லை. பணம் வாங்கும் பொறியாளர் சிதம்பரத்தின் உருவம் மட்டுமே தெரிகிறது.

சாலை பணிக்கு லஞ்சம்
அவர், குமரி மேற்கு மாவட்ட சாலைப்பணிக்களுக்கான ஒப்பந்தங்களை அளிக்கும் பொறுப்பு வகித்து வருகிறார். அருமனை பகுதியில் நடைபெற்ற சாலைபணிக்காக இந்த பணம் கை மாறியதாக கூறப்படுகிறது.
இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ? எதற்காக இந்த நேரத்தில் வெளியானது? இதனை ‘வாட்ஸ் அப்'பில் பரப்பியது யார்? என்பது பற்றி அதிகாரிகள் தரப்பு ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொறியாளர் இடமாறுதல்
பணத்தை வாங்கிய பொறியாளர் சிதம்பரத்திற்கு சமீபத்தில் தான் இடமாறுதல் உத்தரவு வந்துள்ளது. இதற்காக அவர், அலுவலக ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத்தாரர்களுக்கு விருந்து அளிக்க இருந்தார். இந்த நிலையில் லஞ்ச வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே வீடியோ காட்சி வெளியானது குறித்து பொறியாளர் சிதம்பரத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications