முதல்வரே, எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் உங்களுக்கு பேஷனா...? நெடுவாசல் மக்கள் வேதனைக் கேள்வி!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருவது எங்கள் வாழ்க்கையை காப்பாற்றுவதற்குத்தான். பேஷனுக்காக அல்ல என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் எங்கள் போராட்டம் வயிற்றுப் பிழைப்புக்கானது; பேஷனுக்கானது அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த நிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களை பதித்து வருகிறது.
மத்திய அரசின் இத்திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும், நிலத்தடி நீர் மாசடைந்து அங்கு வாழ்வதே கேள்விக்குறியாகி விடும் என கூறி அக்கிராமத்தைச் சார்ந்த மக்கள் இரண்டாம் கட்டமாக, 89 நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாவினால் சுட்ட வடு
இந்நிலையில் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்கள் குழந்தைகளுடன் போராட்டம் செய்வது தற்போது பேஷன் ஆகி வருகிறது என கூறினார். இது போராட்டத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து மக்களையும் மிகக் கடுமையாகப் பாதித்தது.
இது பேஷனா?
இதுகுறித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் சிறுவர்கள், பெண்கள் கூறுகையில், இது எங்கள் வாழ்க்கையை காப்பாற்றுவதற்கான போராட்டமே ஒழிய பேஷனுக்காகப் போராட்டம் நடத்தவில்லை என வேதனையுடன் கூறியுள்ளானர்.
சிறப்புத் தீர்மானம் இயற்ற முடியுமா?
மேலும் முதல்வர் சட்டசபையில் கூறிய இந்த வார்த்தைகளை, சிறப்புத் தீர்மானமாக இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பினால் போராட்டத்தை நிறுத்திக்கொள்கிறோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறியுள்ளனர்.
டாஸ்மாக் போராட்டம்
திருப்பூர் சாமளாபுரத்தில் அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டிய ராஜன் டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதனால் அவருடைய கேட்கும் திறனே பாதிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விளக்கமளிக்கையில் முதல்வர் எடப்பாடியார், பெண்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என கூறினார்.
போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் முதல்வர்
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விவசாயிகள் போராட்டம், டாஸ்மாக், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, தாமிரபரணியில் குளிர்பான நிறுவனங்கள் நீர் எடுப்பதைத் தடுக்கும் போராட்டம் என தினம் ஒரு போராட்டம் நடந்து வருகிறது. அதில் பெண்களும் சிறுவர்களும் கலந்துகொள்கின்றனர். ஆனால், அனைவரையும் பாதிக்கும் வகையிலும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் முதல்வர் எடப்பாடியார் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.