கூவத்தூரில் காலையிலேயே மட்டனும் கொடுத்து "மட்டை" ஆக்குறாங்க...தி.நகர். எம்.எல்.ஏ. பொளேர்
கூவத்தூரில் காலையிலேயே மட்டனும் கொடுத்து மட்டைய ஆக்குறாங்க என தியாகராயர் நகர் எம்.எல்.ஏ. சத்யா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் காலையிலேயே மட்டனும் கொடுத்து மட்டைய ஆக்குறாங்க என தியாகராயர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்கள் சசிகலா கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர்.
தற்போது சசிகலா அணி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க போராடி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கும் வரை ரிசார்ட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என எம்.எல்.ஏக்கள் உறுதியாக உள்ளனர்.
இருப்பினும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவே கூறி வருகின்றனர். அதேநேரத்தில் நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என 25 எம்.எல்.ஏக்கள் நேற்று பேட்டியளித்தனர்.
இந்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான தியாகராயர் நகர் சத்யா, காலையிலேயே மட்டனும் கொடுத்து மட்டைய (மது) ஆக்குறாங்க... சுதந்திரமாக இருக்கிறோம் என கூறினார். எம்.எல்.ஏ.க்களுக்கு புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்படுவதாக கூறப்பட்டு வருவதை தற்போது எம்.எல்.ஏ. சத்யா உறுதி செய்துள்ளார்.