தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி: விஜயகாந்த்
காஞ்சிபுரம்: வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த் பேசியதாவது: எங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு மக்களின் வறுமையைப் பற்றித் தெரியும், அவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற கருத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசிய கூட்டணி ஆட்சி 2016-இல் மலரப் போகிறது.
விரோதிகளைக் கூட மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்கக் கூடாது. அப்படிப்பட்ட துரோகிகள்தான் இரண்டு திராவிடக் கட்சிகளும். அவர்களுக்கு நீங்கள் எப்போதும் வாக்களிக்கக் கூடாது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு பதவி ஆசை இன்னும் விடவில்லை. ஆனால், இந்த முறை அவர் கனவு பலிக்கப்போவதில்லை.
ஆனால், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்களுக்குப் பதவி ஆசை இல்லை. அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வேலை வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே இத் தேர்தலுக்குப் பிறகு எங்கள் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றார்.












Click it and Unblock the Notifications