பாஜக அணிக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்போம்!- பொன் ராதாகிருஷ்ணன்
தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
இதில் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், அகில இந்திய இணை பொதுசெயலாளர் சத்தீஷ் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்திய அளவில் மோடி அலை நன்றாக உள்ளது. தமிழகத்திலும் அந்த அலை முழுமையாக உள்ளது. பிப்ரவரி மாதம் 15ந் தேதிக்குள் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைத்துள்ளோம். அவர் வருகை தேதி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.
பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பா.ம.க.வுடன் ஏற்கனவே பேசி உள்ளோம். ம.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேசிவருகிறோம். தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வரும் என நம்பிக்கை உள்ளது.
மேலும் நடிகர் ரஜினி காந்த் உட்பட தமிழத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடம் ஆதரவு கேட்க உள்ளோம். இதனால் பலமான அணியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொள்ளும்," என்றார்.