ஆளுநரின் “அரசியல் விசுவாசம்”.. இந்திய அரசியலமைப்பையே திருத்துவோம் - அடுத்த டார்கெட்டை சொன்ன ஸ்டாலின்
சென்னை: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பல்ல என்று தெரிவித்து இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள் என்று தெரிவிக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது. ஆனால், வெளிநாட்டு நிதி உதவி மூலமாக மக்களை தூண்டிவிட்டு அதை மூடிவிட்டார்கள்." என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள் சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை உணர்ந்து அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன்." என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டசபையில், அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாலை ஆன்லைன் ரம்மிக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், "சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம்.
Withhold" என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என விதண்டாவாதமாக பேசும் ஆளுநர், அரசின் கொள்கைகளை - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை - சட்டமன்றத்தின் இறையாண்மையை கொச்சைப்படுத்தி பேசுகிறார். ஆளுநரின் "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" விழுங்கி விட்டது. ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications