சீட் கொடுத்தால் சரி.. இல்லாவிட்டாலும் சங்கடம் இல்லை.. ஜெ.வை சந்த்தித்த பின்னர் தனியரசு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிடம் நாங்கள் குறிப்பிட்டு எந்த தொகுதியையும் கேட்கவில்லை. அவராக எது கொடுத்தாலும் பெற்றுக் கொள்வோம். கொடுக்காவிட்டாலும் சங்கடம் இல்லை. அதிமுகவை தொடர்ந்து ஆதரிப்போம் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.
இன்று முதல்வர் ஜெயலலிதா அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுக்களை நடத்தினார். இதற்காக இந்திய குடியரசுக் கட்சி செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, அகில இந்திய பார்வார்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தனியரசு கூறுகையில், நடைபெறவிருக்கின்ற 2016 சட்டசபை பொதுத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க கொங்கு இளைஞர் பேரவை தனது முழுமையான வலிமையான, ஆதரவை தெரிவித்துள்ளோம்.
தொகுதிகள் குறித்து ஜெயலலிதா அறிவிப்பார். நாங்கள் அதிமுகவிற்கு ஆதரவை தெரிவித்திருக்கிறோம். குறிப்பிட்டு தொகுதி கேட்கவில்லை.
சென்ற தேர்தலில் நான் ஒரு தொகுதிதான் கேட்டேன். அதுவும் நான் விரும்பி கேட்ட பரமத்தி வேலூர் தொகுதியையே ஜெயலலிதா தந்தார். இந்த தேர்தலில் நான் குறிப்பிட்டு எந்த தொகுதியையும் கேட்கவில்லை.
தொகுதி குறித்து கேட்டு, அது சம்பந்தமாக முரண்படுகிற அளவிற்கு ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்ததில்லை. எடுக்கவும் மாட்டோம். ஆதரவு கடிதம் கொடுத்திருக்கிறோம். ஜெயலலிதா அங்கீகாரம் தருவார்.
அதிமுக அணியில் இருந்து தேர்தலை சந்திப்போம். சீட் கொடுக்கவில்லை என்றாலும், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்போம். அதில் ஒன்றும் எங்களுக்கு சங்கடம் இல்லை. அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதே எங்களின் நோக்கம் என்றார் தனியரசு.












Click it and Unblock the Notifications