முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கல் விழுந்தால் கோட்டையை நொறுக்கிவிடுவோம்: சீறிய வைகோ
விழுப்புரம்: முற்றத்தின் மீது ஒருகல் விழுந்தால் கூட கோட்டையை நொறுக்கி விடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 2014ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது உறுதி எனவும் கள்ளக்குறிச்சியில் நடந்த நிதி அளிப்பு கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் வடக்கு-தெற்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில கழக வளர்ச்சி நிதி-தேர்தல் நிதி பொதுக்கூட்டம், விழும்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று (17.11.2013) நடைபெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு-தெற்கு மாவட்டங்களின் சார்பாக ரூபாய் 40 இலட்சம் தேர்தல் நிதியாக பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட வைகோ பேசியதாவது :

தேர்தல் நிதி
இந்த நிதி அளிப்பு கூட்டத்தில் தெற்கு மாவட்டம் சார்பில் ரூ.11 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் பிற கட்சிகள் கோடான கோடி பணத்தை தேர்தலுக்காக செலவு செய்யும் நிலையில், இந்த தொகையை வைத்து எப்படி சமாளிக்கப்போறீர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம். சிறு உளிதான் பெரும் மலையை உடைக்கிறது.
நான், திராவிட கழகத்தில் அடிமட்டத்தில் இருந்து வந்தேன். நாம், நிதி கேட்டால் யார் தரப்போகிறார்கள் என்று சிலர் கேட்க்கவில்லை. தேர்தல், கட்சி நடத்துவதற்கு நிதி கேட்டால் மக்கள் தருவார்கள்.

கடையடைப்பு வெற்றி
காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து கடை அடைப்பு போராட்டம் கடந்த 12-ந் தேதி நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 21 அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் மட்டும் ஆதரவு தெரிவித்து, கடையடைப்புக்கு கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று ஆயிரக்கணக்கான கிராமங்களில் 100-க்கு 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை 20 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறேன். இனிவரும் காலங்களில் பலமான கட்சிகளுடன் மோதி கட்சி நடத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனவே கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்கவேண்டும். உழைக்காதவர்கள் பதவியில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும். கொள்கையை நேசிப்பவர்கள் போராட வரவேண்டும்.

கோட்டையை நொறுக்குவோம்
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பதை தெரிந்த நான், எனது சொந்த நிகழ்ச்சியை கூட பார்க்காமல் உடனடியாக சென்றேன். அங்கு 500 போலீசார் யாரையும் உள்ளே விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். என் உயிரே போனாலும் சரி என்று, அவர்களை மீறி உள்ளே நுழைந்தேன். முதல்வர் போட்ட முற்றுகையை வைகோ பட்டாளம் உடைத்து உள்ளே சென்றது. இனி முற்றத்தின் மீது ஒருகல் விழுந்தால் கூட கோட்டையை நொறுக்கி விடுவோம்.ங

லோக்சபா தேர்தல்
வருகிற லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க. உறுதியாக போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதி என்று இப்போது சொல்ல முடியாது. பின்னர் அறிவிக்கப்படும். தேர்தலில் போராடி வெற்றிபெறுவோம். இளைஞர்களை எதிர்பார்க்கிறோம். மற்ற கட்சியில் இருப்பவர்களை கட்டாயப்படுத்தி சேர்க்க வேண்டாம். அரசியலில் இல்லாத இளைஞர்களை நமது கட்சிக்கு கொண்டுவாருங்கள்.

அறிவுரை சொன்ன வைகோ
இந்த இயக்கம் பலமான சக்திகளோடு மோத வேண்டிய இருக்கிறது. இனி உழைப்பவர்கள்தான் பொறுப்புக்கு வரவேண்டும். முடியாதவர்கள் தானாக ஒதுங்கிக்கொள்ளலாம். குடும்ப நலனை பாதுகாத்துக்கொண்டு, வருமானத்திற்கு ஏற்றாற்போல் செலவு செய்யுங்கள்.

பங்கேற்ற மதிமுகவினர்
இக்கூட்டத்தில் மதிமுக பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் மு.செந்திலதிபன், வெளியீட்டுச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தொழிலாளர் முன்னணித் தலைவர் புதுவை செ.முத்து, மாவட்டச் செயலாளர்கள் விழுப்புரம் வடக்கு-க.நடராசன், தெற்கு-செஞ்சி ஏ.கே.மணி, புதுச்சேரி ஹேமா பாண்டுரங்கன், கடலூர் என்.இராமலிங்கம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சித் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் முன்னணியினர் கலந்துகொண்டடினர்.












Click it and Unblock the Notifications