எஸ்பிஐ சினிமாஸ் ஒப்பந்த ரத்து ஆவணத்தை பார்த்த பின்னரே முடிவு: விஷால்
சென்னை: எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்த ரத்து ஆவணத்தை பார்த்த பின்னரே தங்களின் முடிவை கூற முடியும் என்றும் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
முறைகேடு புகாரால் எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாக நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளதை அடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் தலைவர் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட ஆவணத்தை முறையாக நடிகர் சங்கத் தலைவரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறினார். தன் மீதான முறைகேடு புகார்கள் மனதை அதிகம் காயப்படுத்தியதாகவும், அத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். பின்னர் தி.நகரில் உள்ள நடிகர் சங்க நிலத்தை ஆய்வு செய்தனர். அப்போது தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஊடகங்களின் மூலமே தெரிந்து கொண்டதாக கூறினார். எது நடக்க வேண்டும் என்று விரும்பினோமோ அது நடந்துள்ளது. அது மகிழ்ச்சியான விசயம்தான். அதைப்பற்றி ஏன் அவர் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்ற தெரியவில்லை. ரத்து செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்த்த பின்னரே இதுபற்றி முடிவெடுக்க முடியும் என்றும் கூறினார்.
அதே நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பூச்சி முருகன், தன்னிச்சையாக நடிகர் சங்கம், ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றார். நடிகர் சங்க செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications