ஜெயலலிதா நலம் பெற்று வீடு திரும்பிய உடன் போயஸ்கார்டன் செல்வோம்: பிரேமலதா
அப்பல்லோவிற்கு சென்று விசாரித்து விட்டு பேட்டி கொடுக்க மாட்டோம், ஜெயலலிதா போயஸ்கார்டன் திரும்பிய பின்னர் நேரில் சென்று விசாரிப்போம் என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
திண்டுக்கல்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்துடன் நேரில் செல்வேன் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பிற மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள் என அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றுள்ளனர்.

விஜயகாந்த்
தேமுதிக தலைவரான விஜயகாந்தும் தேமுதிகவின் மாநில மகளிர் அணிச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்தும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் வரவில்லை. இதற்கு சில தினங்களுக்கு முன்னர் பதில் சொன்ன விஜயகாந்த், போயஸ்கார்டனுக்கு நேரில் சென்று ஜெயலலிதாவை சந்திப்பேன் என்று கூறினார்.

பணப்பட்டுவாடா
இந்நிலையில், விதிமுறை மீறல் தொடர்பான வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெற்றால் 3 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றிபெறும். ஏற்கனவே, அதிக பணப் பட்டுவாடா நடந்ததால்தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தல் ரத்தாகின. தற்போது மீண்டும் பணப் பட்டுவாடா நடந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை
தஞ்சை தொகுதியில் வீடுவீடாக பணப் பட்டுவாடா செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்தல் உதவி ஆணையர் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்து தேர்தல்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மட்டுமல்ல எல்லாமே ஸ்தம்பித்து உள்ளது.

நேரில் சந்திப்போம்
ஜெயலலிதா கடிதம் எழுதியதாக வந்த தகவல் வேடிக்கையாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்துடன் நேரில் செல்வேன்.

போயஸ்கார்டன் செல்வேன்
மருத்துவர்களை மட்டும் சந்தித்துவிட்டு பேட்டி கொடுக்கும் செயலை நாங்கள் விரும்பவில்லை. ஏற்கனவே, இதுகுறித்து விஜயகாந்த் தெரிவித்ததைப்போல், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்பியதும் அவரை நேரில் சென்று சந்திப்போம். அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications