18 பேர் தகுதி நீக்கம்... சபாநாயகரின் ஆணையை எதிர்த்து வழக்கு தொடருவோம் - வெற்றிவேல் எம்எல்ஏ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார் சபாநாயகர் தனபால். இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாக கூறியுள்ளார் எம்எல்ஏ வெற்றிவேல்.
சென்னை: சபாநாயகர் தனபாலின் தகுதி நீக்க ஆணையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல்.
முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றனர். அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு பேரவைத்தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதில், கம்பம் தொகுதி எம்எல்ஏ எஸ்டிகே ஜக்கையன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்ததால், மற்ற 18 பேரும் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் அளித்த கெடு முடிந்தும் எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்காத காரணத்தினால் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார் சபாநாயகர் தனபால்.
சபாநாயகர் தனபாலின் ஆணைப்படி, பூந்தமல்லி தொகுதி டி.ஏ.ஏழுமலை பெரம்பூர் தொகுதி பி.வெற்றிவேல் திருப்போரூர் மு.கோதண்டபாணி, சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், குடியாத்தம் தொகுதி சி.ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் தொகுதி ஆர்.பாலசுப்பிரமணி, பாப்பிரெட்டி பட்டி பெ.பழனியப்பன், அரூர் ஆர்.முருகன், நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் எம்.ரெங்கசாமி,மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி, ஆண்டிபட்டி தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் கா.கதிர்காமு, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், பரமக்குடி எஸ்.முத்தையா, விளாத்திக்குளம் கு.உமா மகேஸ்வரி, ஒட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார். நாங்கள் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என்றும் கொறாடா உத்தரவு எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்றார்.
நாங்கள் கட்சி தாவல் செய்யவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றால் எங்களுக்கு 100 சதவிகிதம் நியாயம் கிடைக்கும்
இந்திய அரசமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி தகுதி நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
எங்களை தகுதி நீக்கம் செய்ய அவர்களால் முடியாது. மிகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சபாநாயகர் தனபால் அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார்.