ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் தொடர்பில்லை... நடிகர் பார்த்திபன் கிண்டல்
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்தார்.
ஈரோடு: அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போது மறைமுகமாக குறிப்பிட்டார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கு தமிழ் அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினரை தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்து கடந்த 2 நாள்களுக்கு முன்னர் ரஜினி கருத்து கேட்டார்.
இவரது அரசியல் பிரவேசம் குறித்து இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினி அரசியல் குறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முருகன் கோயிலுக்கு வந்த பார்த்திபனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவர் ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
ரஜினி ஆண்டவனிடம் நேரடி தொடர்பு வைத்துள்ளார். எனக்கு நேரடி தொடர்பு இல்லை. இருந்தால் இது குறித்து நானே ஆண்டவனிடம் கேட்டு சொல்லிவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி சொல்லும் வரை பொறுமை காப்போம் என்றார் பார்த்திபன்.