தமிழக தே.ஜ.கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி: வைகோ
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உண்டு. நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் மறுமலர்ச்சி திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
தமிழ் ஈழக்கவிஞர் காசி ஆனந்தன் மதிமுகவைப் பற்றிய பிரச்சாரப் பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு இசையமைத்துப் பாடியுள்ளார் பிரபல பாடகர் டி.எல்.மகாராஜன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
பாஜக கூட்டணியில் இணையப்போவதாக ஜனவரி 1ம் தேதி இதே இடத்தில் கூறினோம். அதேபோல இணைந்துள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். இந்தியாவெங்கும் மோடி அலைவீசுகிறது. மோடி பிரதமர் ஆவது உறுதி.
தமிழருவி மணியனுக்கு பாராட்டு
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதற்குக் காரணம் தமிழருவி மணியன் அவர்களின் அயராத முயற்சிதான்.
இந்திய ஐக்கிய நாடு
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாநிலங்களுக்கு சமமான உரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘இந்திய ஐக்கிய நாடு,' ‘யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
மக்கள் ஆதரவு உண்டு
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உண்டு. நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிற கட்சிகளுக்கு வாக்களித்து வீணாக்கி விடாதீர்கள் என்கிறார். இதை அவர் எப்படி கூறமுடியும்?.
வலுவான அணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான அணி. பலமான அணி. ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். எனவே வாக்காளர்கள் தொலை நோக்குப் பார்வையுடன் வாக்களிக்க வேண்டும்.
தமிழர்களை வஞ்சித்த காங்கிரஸ்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழகத்தை அனைத்து வழிகளிலும் வஞ்சித்து விட்டது. முல்லைப்பெரியாறு அணை, காவிரி நதிநீர் பிரச்சினையில் வஞ்சித்து விட்டது. எனவே இம்முறை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும்.
பொது வாக்கெடுப்பு
தமிழீழம் மலர உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.