விருப்பமில்லாத விஜயகாந்தை கட்டாயப்படுத்த மாட்டோம்!- தமிழிசை
சென்னை: தேமுதிக இன்னமும் எங்கள் கூட்டணியில் இருப்பதாகத்தான் நம்புகிறோம். ஆனாலும் விஜயகாந்துக்கு விருப்பமில்லாவிட்டால் அவரைக் கட்டாயப்படுத்தி சேர்க்க மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரர்ராஜன் தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து திரும்பிய தமிழிசை விமான நிலையத்தில் நேற்று இரவு அளித்த பேட்டியில், "தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2014ல் பாஜ தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பாஜ கூட்டணியில் இடம் பெற விரும்பாத கட்சியை நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். அவர்களுக்கு எங்கள் கூட்டணியில் சேர விருப்பம் இல்லை என்றால் வற்புறுத்த மாட்டோம். தேமுதிக, எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இடம் பெற்றுள்ளது. தற்போதும் அது எங்கள் கூட்டணியில் இருப்பதாகத்தான் நினைக்கிறோம். எனவே தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் தேர்தல் கூட்டணி குறித்து பேசுவோம்.
அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி விஜயகாந்துக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம். கூட்டணி என்பது அவர்களுடைய விருப்பம். அது தானாக வர வேண்டும். வற்புறுத்தி வர கூடாது,''என்றார்.