3 ஃபேனு.. பளீர் வெஸ்டர்ன் டாய்லெட்.. எத்தாதண்டி டிவி.. மல்லையாவுக்காக அடேங்கப்பா சிறை அறை..!
மும்பை: மும்பை சிறையில் விஜய் மல்லையாவுக்கு செய்யப்பட்டுள்ள தயார் நிலையில் உள்ள வசதிகளை வீடியோவாக ஷூட் செய்து லண்டன் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது சிபிஐ.
கிங்பிஷர் நிறுவன உரிமையாளரான விஜய் மல்லையா, கிங்பிஷர் விமான நிறுவனத்தையும் நடத்தி வந்தார். போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் நிறுவனமும் இவருடையதே.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காக இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளில் கடன் வாங்கினார். கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு கிங்பிஷர் விமானம் நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடனை பெற்றுள்ளார் மல்லையா. இதைக் கட்ட முன்வராத நிலையில் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்துக்கு ஓடி விட்டார் மல்லையா.

ஜாமீன்
விஜய் மல்லையாவை நாடு கடத்த இந்திய அரசு முயற்சித்து வருகிறது. இதுவரை பலன் கிடைக்கவில்லை. இடையில் லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட மல்லையா சில நிமிடங்களிலேயே விடுதலையாகி விட்டார்.

இந்திய அரசு
தற்போது இந்திய வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு கடத்தினால் அவரை மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கவுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வசதிகள் இருக்காது
இதையடுத்து விஜய் மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தனர். அதில், இந்திய சிறைகளில் சூரிய வெளிச்சம் கூட இருக்காது, சுத்தமான அறைகள் இருக்காது என்று ஆட்சேபம் கூறப்பட்டது.

சிபிஐ வீடியோ
இதையடுத்து மும்பை ஆர்தர் சாலை சிறையில் 12-ஆம் எண் சிறை அறை (இங்குதான் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது) எப்படி இருக்கும், என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்த வீடியோவை லண்டன் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

சிறைகள் தூய்மை
அந்த அறையில் நவீனமான வெஸ்டர்ன் டாய்லெட், 6 லைட்டுகள், 3 பேன்கள், சுவற்றில் வெள்ளை நிற பெயிண்ட், 40 இஞ்ச் எல்சிடி டிவி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நூலகம்
அதுபோல் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தையும் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. மல்லையா தங்க வைக்கப்பட்டுள்ள சிறை கிழக்கு பார்த்ததாகும். எனவே அங்கு சூரிய வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை. மல்லையா விரும்பினால் அவருக்கு அறையில் நூலகம் அமைத்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் நேரம்
பல்வேறு வங்கிகளில் ரூ9000 கோடி கடனை பெற்றுக் கொண்டு லண்டனுக்கு தப்பியோடிய ஒரு குற்றவாளிக்காக சிறையில் இது போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதை வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்துக்கு இந்திய அரசு அனுப்பியுள்ளது மக்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications