தோளில் தட்டி சிரித்த முதல்வர்.. இலாகா மாற்றம் பற்றி அமைச்சர் மனோ தங்கராஜிடம் ஸ்டாலின் சொன்னது என்ன?
சென்னை : இன்று ஒருவர் தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்த நிலையில், மேலும் 4 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இலாகா மாற்றப்பட்ட அமைச்சர்களில் ஒருவரான மனோ தங்கராஜ் இன்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது முதல்வர் தன்னிடம் கூறியது பற்றி ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திமுக அரசு கடந்த 2021 மே7-ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் நேற்று முன்தினம் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார்.
டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வசம் இருந்த தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றனர்.
இலாகா மாற்றத்தையடுத்து, அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அமைச்சர் மனோ தங்கராஜின் தோளைத் தட்டி, அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். "இது உங்களுக்கு ப்ரொமோஷன்" என முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மனோ தங்கராஜிடம் கூறியுள்ளாராம்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், "பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று முதல்வர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது, இது Promotion, IT துறையை சிறப்பாக நடத்தியது போல் பால்வளத் துறையயும், சிறப்பாக நடத்தவேண்டும் என கூறிய தலைவரின் அன்பு வார்த்தைகள் உற்சாகத்தை தந்தது, தலைவரின் ஆணைக்கிணங்க செயல்படுவேன்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications