தேர்தலில் நிச்சயம் தோற்பேன்... முன்பே சொன்ன திருப்பரங்குன்றம் சரவணன்
இடைத்தேர்தலில் நான் ஜெயிக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் இருந்தே பேசி வந்த திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனின் நம்பிக்கை பலித்துள்ளது.
மதுரை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான அறிவிப்பை கடந்த அக்டோபர் 17ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதே போல அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணன் அதே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அக்டோபர் 30ம் தேதி அமாவாசை நாளில் ஞாயிறு மாலை ராகுகாலத்தில் எதிர்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை அறிமுகம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதன்பின்னரே சரவணன்தான் வேட்பாளர் என்பது உறுதியானது.
ராகுகாலத்தில் பிரச்சாரம்
விமான நிலையம் அருகே தூத்துக்குடி சாலை சந்திப்பில் உள்ள கருப்பசாமி கோயில் எதிர்புறத்தில் அவரது ராசியான இடத்தில் ஞாயிறு மாலை 5 மணிக்கு கொளுத்த ராகுகாலத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரதமையில் வேட்புமனு
அக்டோபர் 31ம் தேதி திங்கட்கிழமையன்று பிரதமை நாளில் திமுக மூத்த தலைவர் திண்டுக்கல் ஐ பெரியசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற டாக்டர் சரவணன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார் சரவணன். அப்போதே ஏழரை ஆரம்பித்தது.
மாவட்ட செயலாளர்கள் மோதல்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேட்பாளராக சரவணனை அறிவித்ததை ஆரம்பத்தில் இருந்தே பலரும் விரும்பாமல் இருந்துள்ளனர். திமுகவின் மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலர் கோ.தளபதி மற்றும் மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலர் பி.மூர்த்தி இடையே நிலவிய பனிப்போர் இந்த இடைத்தேர்தலில் பகிரங்கமாக தெரிந்தது.
குழிபறித்த வெற்றி
தேர்தல் பணியில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் செயல்பட்டதே சரவணனின் வெற்றிக்கு குழி பறித்தது. பிரச்சாரத்திற்கு வந்தபோதே துரைமுருகனிடம் நம்பிக்கையில்லாமல்தான் பேசினாராம். அப்புறம் ஏன் கோடிகளில் செலவு செய்தார் என்று கேட்கிறீர்களா? எப்படியாவது மாவட்ட செயலாளர் பதவி வாங்கிவிட வேண்டும் என்றுதானாம்.
ராகுகாலத்தில் பிரச்சாரம் தொடங்கி பிரதமையில் வேட்புமனு தாக்கல் செய்த சரவணன் நம்பியது போலவே நடந்து விட்டது. அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றே போயிட்டார். அவர் எதிர்பார்த்த மாவட்ட செயலாளர் பதவி கிடைக்குமா? விடுவார்களா?