கருணாஸுக்கு என்னாச்சு.. முந்தா நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு!
Recommended Video

சென்னை: நடிகர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர், திருவாடானை எம்எல்ஏ என பல பொறுப்புகளை சுமந்து நிற்கும் கருணாஸ் தற்போது திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது என்று வரும்போது நெஞ்சு வலியும் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் மிக மிக இயல்பானதே. அரசியல்வாதிகளையும், நெஞ்சு வலியையும் பிரிக்க முடியாது. சமீபத்தில்தான் ஜாமீன் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்தார் கருணாஸ். ஆனால் நேற்று திடீரென புதிய பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் கடந்த ஆண்டு நடந்த பூலித்தேவன் விழாவின்போது தாக்குதலில் ஈடுபட்டதாக வழக்குப் போடப்பட்டிருந்தது. அந்த வழக்கில் கருணாஸைக் கைது செய்ய நெல்லையிலிருந்து ஒரு போலீஸ் படை கிளம்பி சென்னைக்கு வந்தது.

திடீரென வந்த நெஞ்சு வலி
இந்த நிலையில்தான் கருணாஸுக்கு திடீரென நெஞ்சு வலி வந்து விட்டது. அதைத் தொடர்ந்து வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ளனராம்.

முன்ஜாமீன் கிடைக்குமா
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ளது. முன்ஜாமீன் கிடைத்தால் கருணாஸுக்கு பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் போலீஸார் அவரைக் கைது செய்யாமல் சென்னையை விட்டுக் கிளம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது.

நடவடிக்கை உறுதி
துணை முதல்வர் ஓ.பி.எஸ். கருணாஸ் மீதான செயல்பாடுகளை நேற்றுதான் விளக்கியிருந்தார். கருணாஸ் மட்டுமல்லாமல், அவரது செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் மீதும் நடவடிக்கை பாயும் என்று அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையி்ல கருணாஸைக் கைது செய்ய நெல்லையிலிருந்து போலீஸார் கிளம்பி வந்துள்ளனர்.

எப்ப வந்தாலும் கைது உறுதி
கருணாஸுக்கு எப்போது நெஞ்சு வலி சரியாகும், எப்போது அவர் வீடு திரும்புவார் என்று தெரியவில்லை. ஆனால் எப்போது வெளியே வந்தாலும் எப்படியும் அவர் கைது செய்யப்படுவது உறுதி என்று சொல்கிறார்கள். கூவத்தூர் நாயகன் என்ற செல்லப் பெயரும் கருணாஸுக்கு உண்டு என்பதால் அவர் மீதான நடவடிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
கருணாஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications