நீலகிரியில் கணவனின் கழுத்து எலும்பையே உடைத்த மனைவி.. ஆடிப்போன உறவினர்கள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் சாயிராம் நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கார்த்தியாயினி . தினமும் குடித்துவிட்டு வரும் கணவன், அந்த போதையில் என்ன செய்கிறோம் என்று செய்த வேலை, அவருக்கே எமனாக மாறி உள்ளது. கணவனை மனைவி என்ன செய்தார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழகத்தில் காலை முதல் இரவு மதுபானக்கடைகளிலும் பார்களிலும் கூட்டம் கூட்டம் குடிமகன்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் குவாட்டர் முதல் ஆப் பாட்டில் வரை பலர் குடிக்கிறார்கள். பலர் தினமும் குடிக்கிறார்கள். சிலர் வாரத்தில் இரண்டு நாள், சிலர் வாரத்தில் ஒரு நாள், சிலர் மாதத்தில் ஒரு நாள் என குடிக்கிறார்கள்.

முன்பெல்லாம் குடிப்பவர்கள் ஊருக்கு சிலர் தான் இருப்பார்கள். இன்று குடிக்காதவர்கள் எண்ணிக்கையில் தான் சிலர் இருக்கிறார்கள். குடிப்பழக்கம் அந்த அளவிற்கு அதிகரித்துவிட்டது. இந்த குடிப்பழக்கம் பல குடும்பங்களை சீர்குலைத்து வருகிறது. பல குடும்பங்களை பொருளாதார ரீதியாக நசுக்கி வருகிறது.
பல ஏழை குடும்பங்கள் தொடர்ந்து வறுமையில் இருக்க குடிப்பழக்கம் காரணமாக இருக்கிறது. குடிப்பதுடன் சிலர், குடும்பத்தில் வந்து போதையில் சண்டை போடுவது அதிகமாக நடக்கிறது. குடிப்போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மனைவியை அடிப்பது, குழந்தைகளை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிபோதையில் குடும்பத்தை சித்ரவதை செய்வதையும் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே குடிப்போதையில் சண்டை போட்ட கணவனை கழுத்தை நெறித்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் சாயிராம் நகரை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருடைய மகன் தினேஷ்குமாருக்கு 38 வயது ஆகிறது. இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கார்த்தியாயினிக்கு 34 வயது ஆகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தினேஷ்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் கார்த்தியாயினிக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது போதையில் சண்டை போட்ட தினேஷ்குமாரை கார்த்தியாயினி தள்ளி விட்டாராம். இதில் அவர் கீழே விழுந்து மயங்கினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது, தினேஷ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதை அறிந்த மசினகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த போது, தினேஷ்குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கார்த்தியாயினியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கணவனை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கார்த்தியாயினியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை குன்னூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தினேஷ்குமார் தினமும் மது குடித்து விட்டு வருவதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரத்தில் கார்த்தியாயினி தனது கணவரின் கழுத்தை நெரித்ததில் தொண்டை எலும்பு உடைந்து தினேஷ்குமார் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications