போலீஸ் தடியடி... சாலை மறியல்... கல்வீச்ச்சு: சென்னை காசிமேடு போராட்டக் களமானது ஏன்?
தடை செய்யப்பட்ட சீன எஞ்சின்களை கொண்டு அமைச்சரின் உறவினர்கள் மீன் பிடிப்பதை கண்டித்து சென்னை காசிமேட்டில் மீனவர்கள் 3000 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video
சென்னை: தடை செய்யப்பட்ட சீன எஞ்சின் பொருத்திய படகுகளை கொண்டு அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீன்பிடிப்பதுதான் சென்னை காசிமேட்டில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அதிக வேகம் மற்றும் குதிரைத் திறன் கொண்ட சீன எஞ்சின்களை படகுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் சீன எஞ்சின்களை கொண்டு மீன் பிடித்து வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் ஆழத்தில் உள்ள பெரிய மீன்கள் அழியும் நிலை உள்ளதாக மீனவர்கள் கூறினர். இந்நிலையில் காசிமேட்டில் இன்று காலை திரண்ட மீனவர்கள் 3000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர்களின் உறவினர்கள் பொருத்திய சீன எஞ்சின்களை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுமாறு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் கலையாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. எண்ணூர், திருவொற்றியூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் சில மீனவர்கள் காயமடைந்தனர்.